திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20ம் தேடி வயிற்று வலி உண்டானது. இதனை தொடர்ந்து திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அவரது பிரேத பரிசோதனையில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் தான் சிறுமி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் பெற்றோரிடம் வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்ததாகவும் கருவை கலைப்பதற்கு கோவில் வழி முத்தனம் பாளையம் சாலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் 1000 ரூபாய்க்கு மாத்திரையை வாங்கி கொடுத்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், குடும்ப நல துணை இயக்குனர் கௌரி, மாநகர குடும்ப நல அதிகாரி கௌரி சரவணன், தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் பாபு, இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராமசாமி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட மருந்தகத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இந்த மருந்தகத்தை அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் (40) மற்றும் அவருடைய மனைவி கவிதா(35) உள்ளிட்டவர் நடத்தி வந்ததும் ரெட்டிபாளையத்திலும் இவர்கள் ஒரு மருந்தகம் நடத்தி வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது. அங்கு ஆய்வு செய்தபோது காலாவதியான மருந்துகள், மாதிரி மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் மருந்தகத்திற்கு இதனை தொடர்ந்து அதிகாரிகள் சீல் வைத்தனர்.