சென்னையில் பழைய வீடுகளை இடிப்பது தொடர்பாகவும், புதிய வீடுகள் கட்டுவது தொடர்பாகவும் அமைச்சர் அன்பரசன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை முழுவதுமே பழைய கட்டிடங்களின் நிலை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பயன்படுத்த தகுதியற்ற கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சேப்பாக்கத்தில் ஒரு பழைய கட்டிடம், 2014இல் இடிந்து விழுந்தது. பிறகு 2015இல் சென்னை மாநகராட்சி சார்பில், பழைய கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, அபாயகரமான கட்டிடங்களுக்கும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. இதில், ஆபத்தான கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
அந்தவகையில் வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு துறைகளைச் சேர்ந்த கட்டிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. வார்டு வாரியாக, பொறியியல் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கின்றனர். இதில், வசிக்க தகுதியில்லாத கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ்களும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாளில் இடிக்காவிட்டால், மாநகராட்சியே இடித்து அதற்கான செலவை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கவும் செய்கிறது. அதையும் மீறினால், குற்றவியல் தண்டனை சட்டத்தில் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
சென்னை போன்ற நகரங்களில், நிலத்தின் விலை வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற நிலங்களில் பாரம்பரிய கட்டிடங்களை தொடர்ந்து பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில், சென்னையில் மறு கட்டுமான திட்டத்தின்கீழ், புதிதாக 8,723 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பேசுகையில், ”மறுகட்டுமான திட்டத்தின்கீழ் மயிலாப்பூர் வன்னியபுரம், ஆண்டிமான்ய தோட்டம், பருவாநகர், நாட்டான் தோட்டம், ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் தாமஸ் ரோடு பகுதி – 1 மற்றும் பகுதி – 2, சுபேதார் தோட்டம், கங்கைகரைபுரம், பத்ரிகரை, வடக்கு கிரியப்பா சாலை, பெரியபாளையத்தம்மன் கோயில், அப்பாசாமி, எழும்பூரில் உள்ள பெரியார் நகர், எம்.எஸ்.நகர், வேம்புலியம்மன் கோயில் தெரு, சேப்பாக்கம் தொகுதியில் உள்ள கொய்யாதோப்பு என மொத்தம் 7,142 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 8,723 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
கட்டுமானம் நடைபெற்று வரும் திட்டப்பகுதிகளில் மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பெருநகர வளர்ச்சி குழுமம், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் இருந்து பெறவேண்டிய அனுமதியை பெறுவதற்காக பிரத்யேகமாக ஒரு தனி அலுவலர் கோட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.