காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஹர்மடா பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் சைனி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து, மகளை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், கிஷன் சைனி உடனான காதலை கைவிட முடிவு செய்தார்.
இதுதொடர்பாக கிஷன் சைனியிடம் இளம்பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நைசாக பேசி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கிஷன் சைனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.