fbpx

‘கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?’ – திக்விஜய் சிங் கேள்வியும், கங்கனாவின் பதிலும்..

கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கச்சத்தீவு விவகாரம் தேசிய அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்த தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஒரு வாரத்துக்கு முன்பு நாம் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பினோம். காங்கிரஸும், திமுகவும் ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் உயிரோட்டமான ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்பது குறித்து அரசு ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்தியா கூட்டணியினர் தேசத்தின் இறையாண்மையை சேதப்படுத்தியதற்கு பாவப்பட்ட தமிழக மீனவர்கள்தான் அதற்கான விலையைக் கொடுத்து வருகின்றனர். இந்த துரோகத்திற்கு, ஏப்ரல் 19-ம் தேதி மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்” எனக் தெரிவித்தார்.

இதனிடையே, போபாலில் நேற்று (ஏப். 10) செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், “கச்சத்தீவில் யார்தான் வசிக்கிறீர்கள்? பிரதமர் மோடி ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு நடிகையும், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அந்த பதிவில் “அக்‌ஷய் சின் பகுதியை தரிசு நிலம் என்று நேரு அழைத்ததையே திக்விஜய் சிங்கின் ‘கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?’ என்ற கேள்வி பிரதிபலிக்கிறது. நேருவின் சிந்தனை இன்னமும் காங்கிரஸ் கட்சியினர் மனங்களில் அப்படியே இருக்கிறது. இந்த மனப்பான்மை இருந்ததாலேயே இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் காங்கிரஸால் வளர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை

ஆனால், இது புதிய இந்தியா. இங்கு இந்தியாவின் மிக உயரமான தஷிகங் வாக்குப்பதிவு மையத்திலும் குழாய் மூலம் நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோமிக் போன்ற இமாச்சலப் பிரதேச கிராமங்களுக்கு சாலை வசதி கிட்டியுள்ளது. வீடுதோறும் மின்சாரம் கிட்டியுள்ளது. நாட்டின் புவிபரப்பின் மீதான உரிமையில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது. அப்படியான சிந்தனை உடையவர்களுக்கு தேசம் நிச்சயம் தகுந்த பதிலடி கொடுக்கும்” என பதிவிட்டுள்ளார்.

Next Post

குட் நியூஸ் மக்களே!! தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! வானிலையின் புது அப்டேட்!

Thu Apr 11 , 2024
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், இன்று முதல் 15ஆம் தேதி வரையிலும், மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் சில […]

You May Like