பிரதமர் நரேந்திரமோடியை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்ற மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியது. அதே போன்ற ஒரு கூட்டம் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உட்பட 24 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தின் மூலமாக பெங்களூரில் சென்ற தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலினுக்கு அங்கே உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
முன்னதாக அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்ற நிலையில், அது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கான சரியான பதிலை தெரிவிக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்த மாநில துணை முதலமைச்சரான டி கே சிவக்குமார் விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் வரவேற்றுள்ளார். அதோடு, முதலமைச்சர் ஸ்டாலினுடன் திமுகவின் பொருளாளரும், திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி ஆர் பாலுவும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.