தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதுகுறித்து பேசிய அண்ணாமலை தான் கட்டியுள்ள வாட்ச் 3.5 லட்சம் ரூபாய் என்றும், ரஃபேல் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்..
இதை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உலகில் வெறும் 500 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கும் மேல் விலை உள்ள ரஃபேல் வாட்ச்சை வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென வைத்திருக்கும் ஆட்டுப்புளுகர் கட்டி உள்ளார் என்று அதை வாங்கிய ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என்றும் கூறியிருந்தார்..
இதற்கு பதிலளித்த அண்ணாமலை ரஃபேல் கடிகாரத்தின் ரசீது தன்னிடம் உள்ளதாக கூறிவந்தார்.. இதை தொடர்ந்து ரசீது எங்கே என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி, ரஃபேல் கடிகாரத்தின் ரசீதுடன், தனது சொத்து மதிப்புடன் வெளியிடப்படும் என்றும், தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக ஊழல் பட்டியல் நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. DMK Files என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அண்ணமலையின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..