மின் கணக்கெடுப்பு செய்ய போதிய பணியாளர்கள் இல்லாததால், ஜூன் மாதம் கட்டிய அதே மின்கட்டணத்தை இந்த மாதமும் கட்டுமாறு வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சாத்தனூர், சித்தாம்பூர், வேல்குடி, பழையனூர் ஆகிய கிராமங்களுக்கு இங்கிருந்துதான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இங்கு மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் கடந்த ஜூன் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே இந்த மாதமும் செலுத்திவிடுமாறு தினசரி பத்திரிகைகளில் வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ‘மின் கணக்கீடு செய்ய ஆள் இல்லை. அதனால் ஆறாம் மாதம் கட்டணத்தை செலுத்துங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே, ஜூன் மாதங்கள் கோடை காலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் அதிகப்படியான மின் சாதனங்கள் இயக்கப்பட்டிருக்கும். இதனால், மின் கட்டணமும் அதிகமாகியிருக்கும்.
ஆனால், இப்பொழுது மின்சாரத்தின் பயன்பாடு ஓரளவு குறைந்திருக்கும். இதனால் 6ஆம் மாதத்திற்கான மின் கட்டணத்தை விட இந்த மாதம் குறைவாகத்தான் வந்திருக்கும். ஆனால் பழைய மின்கட்டணத்தையே கட்டச் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.