1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது.. நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. இருப்பினும், புதிய வரிகள் எதுவும் முன்மொழியப்படாத இடைக்கால பட்ஜெட்டாக அது இருந்தது… மாலை 5 மணிக்கு சண்முகம் செட்டியார் பட்ஜெட்டை பிரீஃப்கேஸில் தாக்கல் செய்தார். அந்த ஆண்டு மொத்த வருவாய் ரூ.171.15 கோடி என்றும் நிதிப் பற்றாக்குறை ரூ.24.59 கோடி என்றும் மதிப்பிடப்பட்டது.
ஆர்.கே. சண்முகம் செட்டியார் தமிழகத்தை சேர்ந்தவர்.. அவர் 1892-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி, கோயம்புத்தூரில் பிறந்தார்.. சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரம் படித்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். தனது கல்வியை முடித்த பிறகு, அவர் அரசியலில் சேர்ந்தார்.. இந்திய தேசியவாத ஸ்வராஜ் கட்சி மற்றும் நீதிக்கட்சி ஆகிய இரண்டிலும் பணியாற்றினார்.
வழக்கறிஞர், தொழிலதிபர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்.. நிதியமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு, 1933 முதல் 1935 வரை இந்தியாவின் மத்திய சட்டசபை என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் தலைவராகவும் ஆர்.கே. சண்முகம் செட்டியார் பணியாற்றினார். அவர் 1935-1941 வரை கொச்சி மாகாணத்தின் திவானாக இருந்தார்.
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செட்டியை தனது நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்.. காங்கிரஸ் கட்சியை சேராதவர் என்றாலும், காந்தியின் பரிந்துரையால் நேருவால் நியமிக்கப்பட்ட ஒரே தமிழர் என்ற பெருமையை கொண்டவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்..
சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த பெரும்பங்காற்றிய ஆர்.கே. சண்முகம் செட்டியார், சைமா, சிட்ரா, இந்திய தொழில் வர்த்தக சபை ஆகிய அமைப்புகளை நிறுவினார்.. டெல்லி தமிழ் சங்கம், லண்டன் தமிழ் சங்கம், தமிழ் இசை சங்கம் உருவாக உதவிகரமாக இருந்தார்.. இவர் தனது 1953-ம் ஆண்டு மே 5-ம் தேதி தனது 61-வது வயதில் காலமானார்.