சுங்கச்சாவடி மாதாந்திர பயண அட்டைக்கான நடப்பு நிதியாண்டு கட்டணமாக 315 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். அதில், ”தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008-ன் படி, தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வர்த்தகம் இல்லாத வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

அதன்படி, மாதாந்திர பயண அட்டை பெறும் நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 50 முறை அந்த சாலையை பயன்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு நிதியாண்டில் இந்தக் கட்டணம் ரூ.315ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் வர்த்தகம் இல்லாத வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு மட்டும் இச்சலுகை அளிக்கப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.