தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா அவர்களுடைய மகள் பவதாரிணி (47) உடல்நலக்குறைவால் காலமானார். அவர் கடந்த ஜூலை 23ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு பிறந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த பவதாரிணி, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “மை டியர் குட்டிச்சாத்தான்” என்ற படத்தின் மூலம் இவர் திரையுலகில் களமிறங்கி இருந்தாலும், 1995ஆம் ஆண்டு பிரபு தேவாவின் “ராசையா” என்ற திரைப்படத்தில் வந்த “மஸ்தானா மஸ்தானா” என்கின்ற பாடல் தான் இவர் குரலில் ஒலித்த முதல் பாடல். பாடகியாக மட்டுமின்றி, பல திரைப்படங்களுக்கு இவர் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வந்தார். பாடகி பவதாரிணிக்கு கடந்த 2005ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஆர். சபரி ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் பிரபல பத்திரிகையாளர் ராமச்சந்திரன் அவர்களுடைய மகன் என்று கூறப்படுகிறது.
சபரி ராஜ், சென்னையில் புகழ்மிக்க விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களுடைய திருமணம் கடந்த 2005ஆம் ஆண்டு கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடைபெற்றது. பிறகு செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.