அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது RRR படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்தது.. இப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி நமஸ்தே என்று கூறி ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.. இந்திய தயாரிப்பில் உருவான ஒரு படத்திற்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைப்பது இதுவே முதன்முறையாகும்.. ஸ்லம்டாக் மில்லியன் படத்தை வெளிநாட்டு நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/03/rrrnaatu-1024x683.jpg)
ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறப்பு பாடலாக இடம்பெற்றது. விருது மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞரான நடிகை லாரன் காட்லீப் (Lauren Gottlie) உற்சாகமாக நடனமாடினார். இதனால் அரங்கத்தில் இருந்தவர்கள் உற்சாகமாக கைத்தட்டியும், கூச்சலிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆஸ்கர் விருது விழாவில், ‘நாட்டு நாட்டு’ பாடல் நேரடியாகப் பாடப்பட்டது. இந்தப் பாடலை பாடிய ராகுல் சிப்லிகுஞ்-சும் காலபைரவாவும் ஆஸ்கர் மேடையில் பாடினர். முன்னதாக, நடிகை தீபிகா படுகோன் ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்த அறிமுகத்தை ஆஸ்கர் மேடையில் எடுத்துரைத்தார். பாடல் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.
எஸ்.எஸ்.ராஜமௌலி, அவரது மனைவி, ரமா ராஜமௌலி, ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா, ஜூனியர் என்.டி.ஆர், எம்.எம். கீரவாணி மற்றும் அவரது மனைவி ஸ்ரீ வள்ளி, பாடலாசிரியர் சந்திரபோஸ், நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித், எஸ்.எஸ்.கார்த்திகேயா மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆஸ்கர் விழாவில், RRR குழு சார்பாக கலந்து கொண்டனர்..
எஸ்.எஸ்.ராஜமௌல் இயக்கிய ஆர்.ஆர்.ஆர், உலகளாவிய பிளாக்பஸ்டராக மாறி, இந்தியாவிற்கான ஆஸ்கார் விருதைப் பெற்று வரலாறு படைத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களைக் கவர்ந்த பிறகு, RRR 95வது அகாடமி விருதுகளுக்குச் சென்று, சிறந்த அசல் பாடலாக நாட்டு நாட்டுக்கான கோப்பையை வென்றது.
இருப்பினும், ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோருக்கு ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லையாம்.. சந்திரபோஸ் மற்றும் அவரின் மனைவி, மற்றும் எம்.எம்.கீரவாணி மற்றும் அவரின் மனைவிக்கு மட்டுமே இலவச நுழைவு வழங்கப்பட்டது. அதேசமயம், ராஜமௌலி தனது குழு உறுப்பினர்களுக்கு டிக்கெட் வாங்க வேண்டியிருந்தது. அதன்படி ஆஸ்கர் விழாவை காண ராஜமௌலி தலா $25,000, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குழுவினருக்கு கடைசி வரிசை இருக்கைகளை வழங்கியதற்காக அகாடமி விமர்சிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியானதும் பல நெட்டிசன்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது..