தமிழ்நாடு மின்சார வாரியம் எங்கெல்லாம் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யும் என்பதை ஆன்லைனிலேயே அறியலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதம் மாதம் செய்து வருகிறது. அப்படி மின்சார வாரியம் பராமரிப்பு மேற்கொள்ளும் போது, காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை மின்தடை ஏற்படும். அப்படி ஏற்படும் மின்தடை குறித்து சரியான நேரத்தில் தகவல்கள் மக்களுக்கு கிடைப்பது இல்லை. முன்பு போல் செய்தித்தாள்கள் தினசரி மின்தடை குறித்து செய்திகள் வெளியிடுவது இல்லை. இதனால், பொதுமக்களால் மின்தடை குறித்து ஒரே நேரத்தில் அறிய முடியவில்லை. திடீரென ஏற்படும் ஒரு நாள் மின்தடை அவர்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது .
குறிப்பாக இப்போது கோடை காலம் என்பதால் மின்தடை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதுமே எளிதாக மின்தடை எப்போதெல்லாம் ஏற்படும் என்பதை ஆன்லைனிலேயே நீங்கள் வீட்டில் இருந்தபடி அறியலாம். https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டம் அல்லது உங்கள் பகுதியை செலக்ட் செய்தால் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை எப்போது ஏற்படும் எந்த நாளில் ஏற்படும் எவ்வளவு நேரம் ஏற்படும் என்பதை அறிய முடியும். அதே நேரம் திடீரென ஏற்படும் மின் தடைகளை இந்த தளத்தில் அறிய முடியாது.