தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால், ஏராளமான சேதம் ஏற்பட்டது. மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியாமல் இருப்பதால், மக்கள் கடும் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய பாடப்புத்தகங்களை இழந்து தவிக்கின்றனர்.
அவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட உடமைகளை இழந்த மாணவர்களுக்கு நாளை முதல் புதிய பாடப்புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், அவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.