தாம்பரம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு கணவர் தலைமறைவாகி உள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், மகேஸ்வரி நகர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வரப்பிரகாசம் (55). இவரது மனைவி விசுவாசமேரி (50). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மனைவி விசுவாசமேரி அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், தினசரி வீட்டிற்கு தாமதமாக வந்ததால் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
![மனைவியின் நடத்தையில் சந்தேகம்..!! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/07/Fake-Love.jpg)
நேற்று முன்தினம் இரவு முழுவதும் இருவருக்கும் இதுதொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். மனைவி மீதான ஆத்திரத்தில் தூங்காமல் இருந்த கணவர் வரபிரசாதம், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த விசுவாசமேரியை அரிவாளால் தலை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், போர்வையால் உடலை மூடி வைத்துவிட்டு, வீட்டின் கதவை வெளியே தாழ்ப்பால் போட்டுவிட்டு கணவர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் வேலைக்கு செல்லும் தாய் வீட்டை விட்டு வெளியே வராததால் அவரை எழுப்புவதற்காக மகள் ஆனந்தி (28) வந்துள்ளார்.
![மனைவியின் நடத்தையில் சந்தேகம்..!! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/04/Murder-1.jpg)
அப்போது, வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விசுவாசமேரியை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசுவாசமேரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய வரப்பிரகாசத்தை தேடி வருகின்றனர்.