தேனி அருகே ரூ.50 லட்சம் பணத்துடன் தப்பி ஓட்டம் பிடித்த அதிமுக பிரமுகரின் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே பெரியகுளத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நாராயணன் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நடத்தி வருகின்றார். . இவர் ஓபிஎஸ் ஆதரவாளராவார்.அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவரிடம் பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவர் அதே பகுதியில் உள்ள வடகரையை சேர்ந்தவர். நாராயணனின் நண்பருடன் ரூ.50 லட்சம் பணத்துடன் உசிலம்பட்டியில் இருந்து காரில் சென்றுள்ளனர். ஆண்டிப்பட்டி அருகே வந்தபோது ஸ்ரீதரிடம் இந்த பணத்தை வீட்டில் கொடுத்துவிடு எனக் கூறிவிட்டு அங்கிருந்து நண்பருடன் சென்றுவிட்டார். காரில் வந்த ஸ்ரீதர் வீட்டுக்குச் சென்று ஒப்படைக்காமல் மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். எங்கும் அவர் சிக்கவில்லை.
இது குறித்து பெரியகுளம் தென்கரை போலீஸாரிடம் புகார் கூறியதை அடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் கணவரை காணவில்லை எனவும் அவரது செல்போன் அணைக்கப்பட்டு விட்டதாகவும் உயிருக்கு ஆபத்து இருக்கலாம் எனவும் மனைவி ஒருபுறம் புகார் அளித்தார். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியதில் அவர் பணத்துடன் நண்பரின் வீட்டில் தஞ்சம்புகுந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதிப்பணம் எங்கே கொண்டு சென்றார் ? யாரிடம் கொடுத்தார் என்பது பற்றிய தகவல் தெரிவிக்கவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.