நேபாள நாட்டை சேர்ந்தவர், 15 வயதான மோத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நவிமும்பையை சேர்ந்த 21 வயதான சுபம் மாருதி என்ற ஆட்டோ டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் சிறுமியை, சுபம் மாருதி கடத்தியுள்ளார். சிறுமியை கடத்திய அவர், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வாடகை வீட்டில் வைத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், சில நேரங்களில் சிறுமியை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, நாளுக்கு நாள் ஆட்டோ டிரைவர் சுபம் மாருதியின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த சிறுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ டிரைவர் சுபம் மாருதியின் கொடுமை தாங்க முடியாததால் சிறுமி தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதையடுத்து, ஆட்டோ டிரைவர் மீது போக்சோ, கடத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.