வாலாஜாபேட்டை அருகே குடிபோதையில் தாக்க வந்த கணவரை, மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த ஒழுகூர் கிராமம் வடமேட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை – கலைச்செல்வி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்த ஏழுமலை, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால், ஏழுமலைக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு ஏழுமலை அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனைவி கலைச்செல்வியை திட்டியதோடு தாக்கியும் உள்ளார். இதனால் தன்னை தாக்க வந்த ஏழுமலையை, தற்காப்பிற்காக அருகில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தில் கலைச்செல்வி வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஏழுமலை உயிரிழந்தார்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை காவல்துறையினர், ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். தற்காப்பிற்காக கணவனை கத்தியால் வெட்டியதில் அவர் உயிரிழந்ததாக கலைச்செல்வி ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து கலைச்செல்வியை கைது செய்த போலீசார், கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.