அதிமுக தலைமை அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தால் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டது. இந்நிலையில், சேதமான அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீரமைப்புப் பணிகளை அதிமுகவின் இதர நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஆட்களால் சேதப்படுத்தப்பட்ட கதவுகளும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
![அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி..!! கலவரத்தில் உடைந்த கதவுகள்..!! மீண்டும் பரபரப்பு](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Admk-1.jpg)
கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, சில கதவுகளின் சாவிகளையும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் எடுத்துச் சென்றதால் பூட்டுகள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. 8 கதவுகள் சீரமைக்கப்பட்டுள்ளது. கணினிகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதால், அதற்கு மாற்றாக புதிய கணினிகள் வாங்கப்பட்டுள்ளன. அதிமுக தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளும் மாற்றப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்களுடன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.