பொதுக்குழு தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி, பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.