அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரும் நிலையில் பீரோ சாவி இல்லாததால் சாவி செய்யும் தொழிலாளியை அழைத்து வந்து மாற்று சாவியை பயன்படுத்தி பீரோவை திறந்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை உள்பட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதேபோல அவரது மகன் கௌதம் சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை தொடர்கிறது. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இரு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றன. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2006 – 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இந்த காலத்தில் அவர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளை ஒதுக்கியதாகவும், தனது மகன் கௌதம் சிகாமணிக்கு 2 குவாரிகளை ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனை அடிப்படையாக கொண்டு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீட்டில் உள்ள 2 பீரோக்களை திறக்க சாவி இல்லாததால், பூட்டைத் திறக்கும் தொழிலாளியை வரவழைத்து மாற்று சாவி போட்டு திறந்து சோதனை மேற்கொண்டனர். லாக்கரை திறப்பதற்கான முயற்சி செய்தும் ஊழியர் திறக்க முடியவில்லை என கூறியதை தொடர்ந்து லாக்கரை மட்டும் திறக்காமல் பீரோவை திறந்து சோதனை செய்து வருகின்றனர்.