ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே கணக்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கின்ற சாலையில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரு கிராமங்களுக்கு இடையே முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழையால் ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் பகுதி வெள்ளக்காடாக இருக்கிறது.
விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சாலைகளிலும் கடுமையான மழையால் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அந்தியூர் பவானி செல்கின்ற சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அந்தியூர் தனி தீவாக மாறி உள்ளது. அங்கிருக்கும் மக்கள் அன்றாட பணிகளுக்கே நீருக்குள் தத்தளித்தவாறு சென்று வருகின்றனர். இது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.