விமானத்தில் பறக்கும் ஆசையால், விமானத்தை போலவே வீடு ஒன்றை கட்டி கம்போடியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது கனவை நினைவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்போடிய நாட்டின் சியம் ரீப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிராக் பாவ், 43 வயது கட்டுமான தொழிலாளியான இவருக்கு சிறு வயதில் இருந்தே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனாலும், தனது பொருளாதார சூழல் கருதி அதை கனவாக மட்டுமே சுமந்து வந்துள்ளார். இந்தநிலையில், தற்போது, தனது 30 ஆண்டு கனவை நினைவாக்கும் விதமாக, விமான றெக்கை, இன்ஜின், படிகட்டுகள் உள்ளிட்ட உதரி பாகங்களை மாதிரிகளாக வடிவமைத்து அசல் விமானத்தை போலவே வீடு ஒன்றை கட்டியுள்ளார். நிலத்திற்கு மேல் ஆறு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த விமான வீட்டில், 2 படுக்கையறைகள், 2 குளியலறைகள் உள்ளன.
வீடு முழுமையாக இன்னும் கட்டிமுடிக்கப்படாத நிலையில், இது குறித்து பேசிய சிராக் பாவ், இந்த வீட்டிற்காக நான் கடந்த 30 வருடங்களாக சேமித்து வைத்த 20000 அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில், உலகின் ஆகப் பெரிய கோவில் வளாகமான அங்கோர் வாட் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த விமான வீட்டை ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். இதனால் விரைவில் தனது விமான வீட்டின் அருகே காபி ஹவுஸ் ஒன்றை அமைத்து இதை ஒரு சுற்றுலாத் தலம் போல மாற்றி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ள சிராக் பாவ், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் விரைவில் விமானத்தில் நிச்சயம் பறந்து செல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.