’துணைநிலை ஆளுநர் என்னை தினமும் திட்டும் அளவுக்கு கூட, என் மனைவி என்னை திட்டுவதில்லை’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி துணைநிலை கவர்னராக இருப்பவர் வினய் குமார் சக்சேனா. இவர் கடந்த மே மாதம்தான் பொறுப்பேற்றார். அது முதல் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் புதிய கலால் கொள்கை, மருத்துவமனை கட்டுமானம், வகுப்பறை கட்டுமான உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று பி.எஸ்.இ.எஸ். டிஸ்காம்களுக்கு ஆம் ஆத்மி அரசு வழங்கிய மின் மானியத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து விசாரிக்குமாறு கவர்னர் வினய் குமார் சக்சேனா, தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார். இதனால் ஆம் ஆத்மி அரசுக்கும், டெல்லி துணை நிலை கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில், ’துணைநிலை கவர்னர் என்னை தினமும் திட்டும் அளவுக்கு, என் மனைவி கூட என்னை திட்டுவதில்லை. கடந்த 6 மாதங்களில் அவர் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள் அளவுக்கு, என் மனைவி கூட எனக்கு எழுதியதில்லை. துணைநிலை கவர்னர் சாஹிப், கொஞ்சம் சாந்தமாக இருங்க, உங்கள் சூப்பர் முதலாளியிடம் கொஞ்சம் நிதானமாக இருங்கள் என்று சொல்லுங்கள்’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.