கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டது கூட, கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’என் மனைவி அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார். எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவர் என்னை மனரீதியாக துன்புறுத்தி வருகிறார். எனவே, மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து வழங்கக் கோரியும், பேராசிரியர் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி, சௌந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, பணியிடத்துக்கு சென்று, கணவரை பற்றி அவதூறு பரப்பியது, மனரீதியில் துன்புறுத்துவதற்கு சமம். மேலும், வழக்கு விசாரணையின்போது, கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டதாக மனைவி கூறியதும் கூட, கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம். எனவே, கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. தாலி என்பது கணவன் உயிருள்ள வரை பெண்கள் அணிந்திருக்கும் நிலையில், அவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றியது சம்பிரதாயமற்ற செயல்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.