மதுரை மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் அபிராமி (28). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரபுராஜா (32) என்பவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்தத் தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. அதாவது, பிரபு ராஜா சமீபகாலமாகத் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாள்தோறும் இந்த தகராறு நீடித்ததால் பிரபு ராஜாவோடு இனி வாழ முடியாது என முடிவெடுத்த அபிராமி, தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள தனது பாட்டி ஊருக்கு சென்றுவிட்டார். அங்கு தனியே வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார் அபிராமி.
இந்நிலையில், தனது மனைவியைப் பார்க்க பிரபுராஜா நெல்லைக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பிரபுராஜா, தனது மனைவி அபிராமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு ராஜாவைத் தேடி வருகின்றனர். பிரிந்து சென்ற மனைவியை அவரது கணவர் தேடி வந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.