தமிழ்நாட்டில் நிலக்கரி எடுப்பதற்கான இடங்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த ஏப்ரல் 5ம்தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து வேளாண் நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் நிலக்கரி எடுப்பதற்கான இடங்களின் பட்டியலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்று கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நிலக்கரி எடுப்பதற்கான இடங்களில் இருந்து விலக்கு வேண்டும் என பெங்களூரில் என்னை சந்தித்து கோரிக்கை விடுத்தார். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டும் நிலக்கரி எடுப்பதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.