புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் இன்று (மே 1) முதல் நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள தனிநபர் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேலான வணிக பயன்பாட்டு வாகனங்கள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் சாலை போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டு வந்த 130 பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு தற்போது 50 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகளை நிறுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் குமுளிக்கு இயக்கப்படும் பேருந்துகளும், புதுச்சேரி காரைக்கால் மற்றும் காரைக்கால் கோவை இடையே இயக்கப்படும் பேருந்துகளும் இன்று முதல் நிறுத்தப்படுகின்றன. 15 ஆண்டுகள் கடந்த பழைய பேருந்துகள் இன்று முதல் நிறுத்தப்படுவதால் கோடை விடுமுறையில் வெளியூர் செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.