விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்நிலையில், வழக்கம் போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த வேம்பு என்கிற தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், சிவகாசி அருகே உள்ள M. புதுப்பட்டி ரெங்கபாளையம் பட்டாசு ஆலை முன்பு செயல்பட்ட கனீஸ்கர் பட்டாசு கடையில் நடந்த வெடிவிபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கடையில் இருந்தவர் எத்தனை பேர், வேறு யாரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்களா? உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட பின்னரே முழுமையான விவரங்களை கூற முடியும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்த இரு விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.