வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் வங்கிகள் விதிக்கும் அபராதங்கள் பிரபலமானவை. இந்த வங்கிகள் விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அவற்றை கண்காணித்து கட்டுப்படுத்தும் ஆர்பிஐ-யின் அபராதங்களுக்கு மேற்படி வங்கிகள் ஆளாவதுண்டு. அந்த வகையில் எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 3 பொதுத்துறை வங்கிகள், விதிமீறல்களுக்காக கோடிகளில் அபராதம் செலுத்த இருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1.30 கோடி, இந்தியன் வங்கிக்கு ரூ.1.62 கோடி, பஞ்சாப் சிந்து வங்கிக்கு ரூ.1 கோடி மற்றும் ஃபெட்பேங்க் நிதிச் சேவை அமைப்புக்கு ரூ.8.80 லட்சம் என ரிசர்வ் வங்கி அபராதங்களை விதித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை தங்களது திட்டங்களின் நம்பகத்தன்மை மற்றும் வங்கித் திறன் குறித்து உரிய கவனம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
சில திட்டங்களில் வழிகாட்டுதல்களை புறக்கணித்து குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கடனை அனுமதித்ததாகவும், ரிசர்வ் வங்கியின் விதிமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதேபோல், பஞ்சாப் சிந்து வங்கி பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தகுதியான தொகையை வரவு வைக்கத் தவறிவிட்டதை சுட்டிக்காட்டி ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இவற்றுக்கு அப்பால் ஃபெட்பேங்க் ஃபினான்சியல் சர்வீசஸ் தனக்கு எதிரான மோசடி நடவடிக்கைகளை ஆர்பிஐக்கு தாமதமாகப் புகாரளித்ததாக அதற்கு தனியாக ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.