யூடியூப் சேனலில் 1200 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் அதிக பணம் திருப்பித் தரப்படும் என்று கூறி விளம்பரம் செய்து பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த பிரபல தமிழ் யூடியூபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஹேமலதா தம்பதி, கடந்த 2020 ஆம் ஆண்டு மாடர்ன் மாமி என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளனர். இந்த யூடியூப் சேனலில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை பகிர்ந்து வந்துள்ளனர். இந்த யூடியூப் சேனிலில் ஒன்றரை லட்சத்திற்கு மேல் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில் இந்த தம்பதி தங்களின் யூடியூப் சேனலில் 1200 ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் மூதலதன தொகையுடன் 1500 ஆக திருப்பித் தரப்போகிறாம் என்று அறிவித்தனர். இதனை பார்த்து பலரும் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு காத்திருந்தனர். பலரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அந்த தம்பதி அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பாமல் ஏமாற்றியுள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு காவால்துறையின் புகாரளித்தனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இது குறித்து விசாரித்த போது, அந்த தம்பதி 44 பேரிடம் 41 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, இந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ஒரு இரு சக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த யூடியூப் தம்பதி 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.