’நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்’ என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு அளிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், அசாம் மாநிலத்திற்கு சென்று எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அவர் பேசுகையில், ”நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என தெரிவித்தார்.
மேலும், “அசாமின் முக்கிய பிரச்சனை குடியுரிமையாகும். இந்த சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர அரசு விரும்பியது. ஆனால், இன்னும் அதை கொண்டு வர முடியவில்லை. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை என கூறினார்கள். ஆனால், இப்போது வரை இந்த சட்டத்ததை அமல்படுத்த முடியவில்லை. ஏனெனில், இது அவசரமாக கொண்டு வரப்பட்ட முட்டாள்தனமான வரைவு. அரசியலமைப்புக்கு வெளியில் இருப்பவர்களால் ஆபத்து வரவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆபத்து உள்ளது. நாங்கள் அதனை பாதுகாக்க வேண்டும். நான் ராஷ்டிரபதி பவனில் இருந்தால் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்”. இவ்வாறு அவர் பேசினார்.