நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரைச் சேர்ந்தவர் 47 வயதான ராஜ்குமார். விவசாயம் செய்து வரும் இவர், 15 ஏக்கர் விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார். ஜூன் மாதம் 12-ந்தேதி, டெல்டா மாவட்ட விவசாயிகளின் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் கடைமடை பகுதிக்கு குறைந்த அளவு தான் சென்றுள்ளது. இதனால் ராஜ்குமார் சாகுபடி செய்த குறுவை நெற்பயிர்கள் நீரின்றி வாடியுள்ளது. இதனால் ராஜ்குமார் மிகுந்த கவலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜ்குமார் நேற்று முன்தினம் அவரது வயலுக்கு சென்று பார்த்த போது அவரது பயிர்கள் கருகி இருந்துள்ளது.
இதனால் மிகுந்த வேதனை அடைந்த ராஜ்குமாருக்கு, மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருக்குவளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு விவசாயி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.