டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நாளை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த 18ஆம் தேதி 75 மணிநேர தர்ணா போராட்ட தொடக்க அறிவிப்பினை வெளியிட்டது. தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியது. இந்த அமைப்பில் 40 விவசாய இயக்கங்கள் அடங்கியுள்ளன. அவர்கள் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தினை முறையாக அமல்படுத்தும்படி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த அமைப்பின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், அரசுக்கு எதிராக கடந்த ஜூலை 31ஆம் தேதி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் வல்லா பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மறியல் போராட்டம் நடத்தினர்.

அம்பாலா பகுதியிலுள்ள ஷாம்பு சுங்கச்சாவடி, பஞ்ச்குலா பகுதியில் உள்ள பர்வாலா மற்றும் கைத்தால் பகுதியின் சீக்கா என்ற இடத்திலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாளை டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு வர தொடங்கி உள்ளனர். இதை முன்னிட்டு டெல்லியில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி-ஹரியானா திக்ரி எல்லை பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிமெண்ட்டால் ஆன தடுப்பான்களை அரண்களாக போலீசார் அமைத்து வருகின்றனர். அந்த பகுதியில், போலீசார் தீவிர வாகன சோதனைகளையும் நடத்தி வருகின்றனர்.