போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம். அம்பாலா காவல்துறையின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி.
விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 13-ம் தேதி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை மொத்தமாக ஐந்து கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேரணியாகச் செல்வதை விவசாயிகள் இரண்டு நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி மரணம் அடைந்ததற்காக பிப்ரவரி 23ஆம் தேதி கருப்பு தினம் அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வரும் 26ஆம் தேதி நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவார்கள் என்றும் விவசாடிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஹரியானா மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மீது கற்களை வீசியும், குழப்பத்தை உருவாக்குவதன் மூலமும் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க தினசரி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு நபரை 12 மாதங்கள் வரை காரணம் இன்றி தடுத்து வைக்க முடியும். ஒரு நபரை இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளதாக மாநில அரசு அறிவிக்க வேண்டும்.
English Summary: Farmers Protest: The National Security Act came down on the struggling farmers