அமெரிக்காவில் தனது 3 மகன்களை அடுத்தடுத்து வரிசையாக நிற்க வைத்து, துப்பாக்கியால் தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கி குண்டுக்கு உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனாலும், எல்லோருக்கும் எளிதில் துப்பாக்கி கிடைக்கும் வகையில் தான் அமெரிக்க வாழ்க்கை இருக்கிறது. அமெரிக்காவின் ஒஹியா மாகாணத்தில் வசிப்பவர் ஷாட் டொர்மென். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில், தனது மூன்று மகன்களையும் வரிசையாக நிற்க வைத்த டொர்மென் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த டொர்மெனின் மனைவி துப்பாக்கிச்சூட்டை தடுக்க முயற்சித்தார். ஆனால், அவரையும் டொர்மென் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மகள் வீட்டை விட்டு வேகமாக ஓடிச் சென்று அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது, துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டிற்கு சென்றபோது தாக்குதல் நடத்திய டொர்மென் வீட்டில் உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆனால், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டொர்மெனின் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3 மகன்களையும் சுட்டுக் கொன்ற டொர்மென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.