தமிழகத்தில் நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளது..
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் என்பதை மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நாளை (ஏப்ரல் 15) அமலுக்கு வருகிறது. இந்த தடை ஜூன் 14 வரை இந்த தடை அமலில் இருக்கும்.
இந்த தடைக்காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 14 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது. எனவே இந்த மாவட்டங்களை சேர்ந்த 15,000 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும். இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை பராமரித்தல், வலை பின்னுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வர்.