மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை, மற்றும் வருஷநாடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 4,300 கன அடி உபரி நீர் அணையில் இருந்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், வைகை கரையோர மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை சிம்மக்கல் தரை பாலத்தை வைகை நீர் ஆர்ப்பரித்து தாண்டிச் செல்கிறது. தரைப்பாலத்தின் இருபுறமும் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தரைப்பாலத்தில் சிலர் ஆபத்தான முறையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. சிலர் வாகனங்களில் கழுவிக்கொண்டும் இருக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் அதிகரிக்கப்படலாம் என்பதால் காவல்துறையினர் இப்பகுதியில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி அணையில் இருந்தும், திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியிலிருந்தும் விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் அமராவதி ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இரு கரைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணவரும் அந்த பகுதி மக்கள், ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.