உணவுப் பொருட்களின் விலை 5 சதவீதத்திற்குள் கீழ் குறைய வாய்ப்புள்ளதாக யூனியன் வங்கி கணித்துள்ளது.
ஜூன் 2023-க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் உணவு பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்திருக்கலாம் என்று யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம் பிப்ரவரி 2025இல் மேலும் குறைந்து 4%-க்கு கீழ் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முதன்மையாக காய்கறி விலைகள் சரிவு காரணமாகும் என்றும் யூனியன் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 3.94% ஆக குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஜனவரி 2025இல் 4.31 சதவீதமாக இருந்தது. இதற்கு வெங்காயம், உருளை, தாக்காளியின் விலை குறைந்ததே காரணம் என கூறப்படுகிறது. சில்லறை பணவீக்கத்தின் முக்கிய அங்கமான உணவுப் பணவீக்கம், பிப்ரவரி 2025 இல் 4.66%ஆக குறைந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது. ஜூன் 2023 க்குப் பிறகு உணவுப் பணவீக்கம் 5 சதவீத அளவை விடக் குறைந்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
காரீப் பருவ உற்பத்தி மற்றும் காய்கறி விலைகளில் பருவகால திருத்தங்கள் உணவுப் பணவீக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இருப்பினும், அதே காலகட்டத்தில் சமையல் எண்ணெய்கள் மற்றும் சர்க்கரையின் விலைகள் உயர்ந்துள்ளன. மறுபுறம், உணவு மற்றும் எரிபொருளைத் தவிர்த்து, முக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு பிப்ரவரி 2025இல் 3.87%ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் விலை உயர்வுதான். இருப்பினும், உலகளாவிய பொருட்களின் விலைகள் மற்றும் உள்நாட்டு உணவு விநியோக இயக்கவியலில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் எதிர்கால பணவீக்கப் போக்குகளைத் தொடர்ந்து பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.