கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “மாணவியின் உடற்கூறாய்வு முடிந்து, உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முடிவுற்றதாக தெரிவித்தார். மேலும், இவை அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். உடற்கூறாய்வு ஆவணங்கள் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்றை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தார். பின்னர் டிஐஜி தலைமையில், கூடுதல் எஸ்பி., டிஎஸ்பி, ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் இணையதளங்கள், 31 ட்விட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகளால் காவல்துறை விசாரணை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மாணவி மரணம் தொடர்பான விசாரணையும், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருகிறது. மற்றொரு குற்ற வழக்கில் பள்ளி தாளாளர் தொடர்பு உள்ளதால் அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை. தமிழக அரசால் பெற்றோர் – ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த பள்ளி மாணாக்கர்களுக்கு கடந்த 27ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையை சரிசெய்ய இரண்டு வாரங்களாகும்” என்றார்.
அப்போது நீதிபதி, “இதே நிலை நீண்ட நாட்கள் தொடரக்கூடாது. விரைவில் பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்கி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமெனவும், மாவட்டத்திற்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் மிக அவசியம் என நீதிபதி குறிப்பிட்டார். ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து முன்னிலைபடுத்தப்படுவதால், அவற்றை பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலை மேலும் மோசமாவதாக ஆய்வறிக்கைகள் கூறுவதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், மாணவர்களை படிக்கும் இயந்திரமாக மட்டும் மாற்றாமல் அவர்களுக்கான சிறந்த வெளிப்புற சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.