காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாகவே, அரசியல் பணிகளில் இருந்து சோனியா காந்தி கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். பின்னர், ராகுல் காந்திக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2019 மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி, அந்த பதவி மீண்டும் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் தலைவர் பதவி, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல, சமீபத்தில் நடந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கூட சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. தற்போது, ரே பரேலி தொகுதி மக்களவை உறுப்பினராக சோனியா காந்தி உள்ளார். கடந்த 2004 – 2014ஆம் ஆண்டு வரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் தேசிய ஆலோசனை குழு தலைவராக பொறுப்பு வகித்தார். மத்திய அரசு வகிக்கும் திட்டங்களையும் இலக்குகளையும் அமல்படுத்துவதற்காகவும் கண்காணிக்கவும் தேசிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில், பல்வேறு துறை நிபுணர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.