மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பி.எம். கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா. இவர் வழக்கம்போல் கல்லூரி பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தா என்பவர் வழிமறித்து தடுத்துள்ளார். இதையடுத்து கல்லூரி முதல்வருக்கும், முன்னாள் மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை கல்லூரி முதல்வர் மீது ஊற்றி தீவைத்துள்ளார். பின்னர் கல்லூரி முதல்வர் பற்றி எரிந்த தீயுடன் கல்லூரியை நோக்கி ஓடியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 80% தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தின் போது முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தாவுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர் தற்கொலைக்கு முயன்றபோது போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் கல்லூரி முதல்வர் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தா தீ வைத்து கொளுத்தியது தெரியவந்துள்ளது. மேலும், ஏற்கனவே கடந்தாண்டு அக்டோபரில் பேராசிரியர் ஒருவரை அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா கத்தியால் குத்தியதும் விசாரணையில் அம்பலமானது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.