கோயமுத்தூர் போத்தனூர் சிட்கோ பகுதியைச் சார்ந்தவர் ரவிசங்கர்(39). சாப்ட்வேர் இன்ஜினியரான ரவிஷங்கர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் வழங்கிய புகாரில், சென்ற மாதம் 23ஆம் தேதி என்னுடைய telegram செயலிக்கு அமெரிக்காவைச் சார்ந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயரில் ஒரு லிங்க் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த லிங்கில் இருந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு உரையாடினேன். எதிர்முனையில் உரையாடிய நபர், நீங்கள் எங்களுடைய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து நிறுவனம் தொடர்பாக மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்தால் தங்களுக்கு அதற்கு ஏற்ற தொகை தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
இந்த தொலைபேசியில் பேசிய அந்த நபரின் பேச்சை நம்பி, நான் அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கு எண்ணுக்கு பல தவணைகளில் ஒட்டுமொத்தமாக 32,23,909 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் தொகை அனுப்பி வைத்து வெகு நாட்கள் சென்ற பின்னரும் கூட, எந்த விதமான வருமானமும் எனக்கு கிடைக்கவில்லை.
அதன் பிறகு தான் மர்மனவர்களின் மோசடி தான் இது என்று தெரிய வந்தது இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.