ஏப்ரல் 17-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000, 6000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 11,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10-ம் தேதி முதல் காணொளி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.. வழக்கறிஞர்கள் காணொளி மூலம் ஆஜராகலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 17-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. வழக்கு பட்டியலிடப்படாதவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000-ஐ கடக்கும் பட்சத்தில் அல்லது கிளஸ்டர் பாதிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.. எனவே கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..