தெலங்கானா மாநிலத்தில் தனது காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை அந்த இளைஞர் காதலியின் கணவருக்கே அனுப்பிய பகீர் சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். 24 வயதான இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை மகேஷ் யாருக்கும் தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதற்கிடையே, இவர்களின் காதல் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மகேஷுடனான காதலை அப்பெண் முறித்துக் கொண்டுள்ளார். இருவருக்கும் செட் ஆகாது என்பதால் தன்னை விட்டுச் செல்லும்படி மகேஷை வற்புறுத்தியுள்ளார்.
இருப்பினும் இதற்குச் சம்மதிக்காத மகேஷ், தன்னை காதலிக்குமாறு அப்பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில் அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு இளைஞருடன் திருமணம் செய்து வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், காதலியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அவரது கணவருக்கே அனுப்பி வைத்துள்ளார். தனது மனைவி மற்றொரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பார்த்த அந்த இளைஞர், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இப்படியொரு கொடூர சம்பவம் நடந்த பின்னரும் கூட அந்த பெண்ணை, மகேஷ் விட்டு வைக்கவில்லை. அதன் பின்னரும் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அந்த பெண்ணால் மகேஷை ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து, அந்த பெண் தனது பெற்றோரிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார். மகளை இந்த பிரச்சனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என நினைத்த அவரது குடும்பத்தினர், மகேஷை பொது இடத்திற்கு அழைத்துப் பேசியுள்ளனர். இருப்பினும், அப்போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், மகேஷை நடுரோட்டில் வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மகேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த பெண்ணின் பெற்றோர், சகோதரர்கள் உள்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.