திருப்பூரில் ஒரு கிலோ நூல் விலை ரூ.30 குறைந்துள்ளது..
கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து கொள்வார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களாகவே பருத்தி மற்றும் நூல் விலை கடுமையாக உயர்ந்ததால், பின்னலாடை மற்றும் அது சார்ந்து இயங்கும் ஜாப் ஒர்க் உட்பட பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்..
இதையடுத்து மத்திய அரசு இறக்குமதி வரியை தளர்த்தியதால் திருப்பூரில் கடந்த மாதம் ஒரு கிலோ நூல் விலை ரூ.40 குறைக்கப்பட்டது.. இந்த சூழலில் நூல் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.. திருப்பூரில் ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. ஒரு கிலோ நூலின் விலை ஜூலை மாதத்தில் ரூ.40 குறைக்கப்பட்ட நிலையில், மேலும் 30 குறைக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் நூல் விலை ரகத்திற்கு ஏற்றப்படி ரூ.320 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது..