அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, விரதம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில், நேற்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த அவர், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். எனவே, திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி நகர் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இரவு பகல் பாராமல் நூற்றுக்கணக்கில் தூய்மை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவு, குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு வரப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தூய்மை பணியாளர்களுக்கான உணவு அருகில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், நேற்று இவ்வாறு விநியோகிக்கப்பட இருந்த உணவானது, குப்பை வண்டியில் குப்பைகளுக்கு நடுவில் வைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றன. உணவு மூடப்படாமல் திறந்தே இருந்திருக்கிறது. இதற்கு பக்கத்தில் குப்பைகள் உள்ளன. இதனால் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூய்மையான நகரங்களின் பட்டியலில் திருச்சி முதன்மையாக இருக்கிறது. இதற்கு காரணமாக உள்ள தூய்மை பணியாளர்களை நடத்தும் விதம் இதுதானா? என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.,