தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆளுநர் செய்தது அவை மரபு மீறிய செயல் என்று பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. விசிக, மார்க்சிஸ்ட் ஆகியவை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஆளுநரை கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் மற்றும் அண்ணா அறிவாலயம் பகுதியில் உள்ள சாலைகளில் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளன. அதில் Twitter No.1 trending #GetOutRavi என வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், பதிவிட்ட அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தயாநிதி மாறன் ஆகியோர் புகைப்படங்களோடு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை உள்ளிட்டோர் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆளுநரை கண்டித்து சென்னையில் திமுக நிர்வாகி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.