பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ மூன்றாம் கட்ட யாத்திரையை திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிந்தாமணியில் தொடங்கினார். இதனை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ”ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க பிரதமா் மோடி நினைக்கிறார். இந்தியாவில் அதிக ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. நமது நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி திமுக தான். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் ஊழல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகிய இருவரும் ஊழலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விசைத்தறி தொழில் மின்கட்டண உயர்வால் வளராமலேயே உள்ளது. நெசவாளர்களுக்கு மின்சாரம் இல்லை. தமிழ்நாட்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஊழலின் மொத்த உருவாக இருக்கும் திமுக மற்றும் அதற்கு ஊதுகுழலாக இருக்கிற காங்கிரஸை வரும் காலத்தில் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
பாஜகவுக்கு சேவை செய்ய தமிழ்நாட்டில் வாய்ப்பு கொடுத்தால், காவிரி உள்ளிட்ட தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்திடுவோம். விவசாயிகள் அல்லது பொதுமக்கள் குறித்து திமுக கவலைப்படுவதே இல்லை. கான்ட்ராக்டரிடம் எவ்வளவு பணம் வாங்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். வாரிசு அல்லாமல் சாதாரண விவசாயி மகனை தமிழகத்தில் களமிறக்கியிருக்கிறோம்” என்றார்.