தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலனடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சிறப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது.
கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு, ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பண்டிகைக்குள் அனைத்து அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்க வேண்டும் என்ற நிலைமை இருந்ததால், ரேஷன் கடை ஊழியர்களின் பணியும் டபுள் மடங்காகிவிட்டது. இந்த அயராத பணியை கருத்தில் கொண்டு, ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு, ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் ரூ.1.07 கோடி நிதியும் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. ஒரு கார்டுக்கு ரூ.0.50 வீதம், 1.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையானது, ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.