குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் என 5,208 காலியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58,900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன.
![டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!! குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/01/tnpsc.png)
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தேர்வு முடிவுகள் வெளியாகாமல் தாமதமாகி வந்த நிலையில், தற்போது இந்த மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிக்கப்பட்டதில் இருந்து சில மாதங்கள் கழித்தே குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. ஜூன் முதல் வாரம் நடைபெற்ற யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் 20 நாட்களுக்குள் வெளியிடப்பட்டு, தற்போது முதன்மைத் தேர்வுகளும் (mains) நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 4-வது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
![டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!! குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/06/TNPSC-Horticultural-Officer-Admit-Card.jpg)
இதனால் வேலைவாய்ப்பு மற்றும் அடுத்தகட்டத் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்குத் திட்டமிட்டிருந்த தேர்வர்கள் கவலையில் உள்ளனர். டிஎன்பிஎஸ்சி விரைந்து தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்களுக்கு டிஎன்பிஎஸ்சி பணிகளில் ஒதுக்கப்படும் 30 சதவீதக் கிடைமட்ட ஒதுக்கீட்டு விவகாரத்தால், தேர்வு முடிவுகளை வெளியிடத் தாமதம் ஆவதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. விரைவில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.